ரஷ்யாவில் நடந்துவரும் ஃபிஃபா உலகக் கோப்பையில் இன்று இரான் அணி மொராக்கோ அணியைச் சந்திக்கிறது. இரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடையினால், உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடும் இரானுக்குக் காலணிகளை வழங்காமல் தவிர்த்துள்ளது அந்த அணியின் கிட் ஸ்பான்ஸரான `நைக்’ நிறுவனம். #WorldCup
`நைக்’கின் இந்தக் கடைசி நேர முடிவால் இரான் வீரர்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இதனால் அவர்களுடைய கடைசி நேரப் பயிற்சியில் சிறு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் உள்ளூர் விளையாட்டுக் கடைகளில் இரான் வீரர்கள் தங்கள் சொந்தச் செலவிலேயே, காலணிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது மட்டுமன்றி சில வீரர்கள், அவசரத்துக்குத் தாங்கள் ஆடிய கிளப் அணிகளில் உள்ள சக வீரர்களிடம் காலணிகளை வாங்கியுள்ளார்கள்.
இரான் அணிக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையை மிகவும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு பேசுகிறார் அந்த அணியின் பயிற்சியாளர் கார்லோஸ் கியூரோஸ். “இது எங்களுக்குச் சவாலான சூழ்நிலை. இது போன்ற சூழ்நிலைகளைக் கையாள்வதில் மற்ற அணிகளுக்கு நாங்கள் முன்மாதிரியாக இருப்போம். நைக் நிறுவனத்தின் இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இரான்மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் அனைவரும் அறிந்ததே. அதற்காகக் கடைசி நேரத்தில் எங்கள் அணி வீரர்களுக்குக் காலணிகள் வழங்காமல் வைத்திருப்பது தவறான நடத்தை. இதற்காக `நைக்’ நிறுவனம் முன்வந்து எங்கள் அணியில் உள்ள 23 வீரர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில், இது மிகவும் பொருத்தமற்ற, தேவையற்ற நடவடிக்கை” என்றார்.
இன்று நடக்கவிருக்கும் போட்டி பற்றி இரான் பயிற்சியாளர் கூறுகையில், “முதல் போட்டியிலேயே மொராக்கோவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க எங்களிடம் ஆற்றல் உள்ளது. மொராக்கோ அணி பற்றி எங்களுக்கு அதிகம் தெரியும். ஆனால், இரான் அணி பற்றி அவர்களுக்குக் கொஞ்சம்தான் தெரியும்” என்று அதீத நம்பிக்கையுடன் பேட்டியளித்துள்ளார்.
அவரது பேச்சு சிறிது அதீத நம்பிக்கையுடன் தென்பட்டாலும், அதற்கேற்றாற் போல இரான் அணியும் நல்ல ஃபார்மில் உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலில் நடந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அபார ஆட்டத்தால் அர்ஜென்டினாவுக்கு எதிராக இரான் தோற்றது. பின்னர் கார்லோஸ் கியூரோஸின் அபாரமான பயிற்சியால் ஆசிய தரவரிசையில் ஏழாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
2014 உலகக்கோப்பைக்குப் பின்னர் இரான் அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லையென்பது கார்லோஸின் பயிற்சியைப் பறைசாற்றும் ஓர் உதாரணம். இதற்கு முன்பு கார்லோஸ் கியூரோஸ் ரியல் மாட்ரிட்டின் பயிற்சியாளராகவும், மான்செஸ்டர் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் 2010-ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது போர்ச்சுகல் அணியின் மேனேஜராக இருந்து அந்த அணியை `ரவுண்ட் ஆப் 16′ க்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது இரான் அணிக்கு மிகவும் முக்கியம். ஏனெனில், அந்த அணி இடம்பெற்றிருக்கும் பி பிரிவில் ஸ்பெயின், போர்ச்சுகல் என இரண்டு பெரிய அணிகள் இடம்பெற்றுள்ளன. அந்த அணிகளிடம் வெற்றி பெறுவது இதைவிடக் கடினம். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால்தான் அந்த அணிகளைச் சந்திக்குமளவு நம்பிக்கை இருக்கும். நைக் நிறுவனத்தினால் ஏற்பட்ட இந்த அசௌகரியத்தைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் திறமையை அவர்கள் வெளிக்கொண்டுவரவேண்டும்.