‘அபே ஜனபல’ கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பாக இழுபறி நிலைமை தொடர்ந்து நீடித்து வருகின்றமையால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் இடம்பெறுமென கூறப்படுகின்றது.
அபே ஜனபல’ கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் முன்னாள் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த கடிதத்தில், தமது கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளராக தனது பெயரை குறிப்பிடுமாறு வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் கோரியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சபை கூடி விமலதிஸ்ஸ தேரரை குறித்த பதவியில் இருந்து நீக்கியதோடு, புதிய செயலாளர் ஒருவரையும் நியமித்தனர்.
இவ்வாறு பதிதாக தெரிவு செய்யப்பட்ட செயலாளரின் கையெழுத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வேறு ஒருவரின் பெயர், எழுத்து மூலம் பரிந்துரைக்கப்பட்டது.
எனினும் தேர்தல்கள் ஆணைக்குழு எந்தவொரு நபரின் பெயரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் குறித்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியது.
அதற்கு சட்டமா அதிபர் திணைக்களம், இந்த பிரச்சினைக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடாகவே தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதனடிப்படையிலேயே ‘அபே ஜனபல’ கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடமபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

