பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இப்போதைய இளவட்ட நடிகர்களுக்கும் அவர் அவ்வப்போது பாடி வருகிறார். மேலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது மகன் எஸ்.பி.பி.சரணுடன் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அஜீத்குமாரை நான் தான் சினிமாவில் அறிமுகம் செய்தேன் என்றொரு புதிய தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், ஆந்திராவில் என் மகன் எஸ்.பி.பி.சரணும், அஜீத்தும் ஒன்றாகத்தான் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்தார்கள். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த அஜீத், செண்டி மென்டாக எனது மகனின் டிரஸ்களைத்தான் அணிந்து செல்வார்.
அதன்பிறகு பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க நான்தான் அஜீத்தை அறிமுகம் செய்தேன். இப்போது பெரிய ஹீரோவாகி விட்டார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் எந்த அலட்டலும் செய்யாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று எந்த வம்புக்கும் போகாமல், சினிமா, குடும்பம் என்று அமைதியாக வாழ்ந்து கொண்டு வருகிறார். அதுதான் அவரிடம் எனக்கு ரொம்ப பிடித்த விசயம் என்கிறார் எஸ்.பி.பி.,

