கொரோனா வைரஸ் தொடர்பில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 13 முடிவுகள் பிழையானவை என்ற விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ ஆய்வுக்கூட சம்மேளனம் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது. இதில் 8 பரிசோதனைகள் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டன.
நான்கு பரிசோதனைகள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஒரு பரிசோதனை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டவர்களுக்கு தொற்று இல்லையென்பது பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
இது PCR பரிசோதனை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையை தகர்த்துவிடும் என்று அரச மருத்துவ ஆய்வுக்கூட சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு எவ்வித அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்றும் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.













