மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிராம மட்டத்திலுள்ள மக்களின் தேவைகளை அறிந்துகொள்வதற்காக, கிராமம் ஒன்றுக்கு 5 அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அதிகாரிகள், இடர் முகாமைத்துவ அதிகாரிகள், விவசாய அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் ஆகியோர் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்களின் தேவைகளைக் குறித்த அதிகாரிகள் கண்டறிந்த பின்னர், அத்தியாவசியப் பொருட்களை உரிய விலையில், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்கப்படல் வேண்டும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக தனியாரின் லொறிகளைப் பயன்படுத்துவதற்கான அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குறித்த பகுதிகளிலுள்ள லொறிகள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர, லொறிகளை வழங்குவதற்கு விருப்பமுடைய லொறி உரிமையாளர்கள் இருப்பின், பெயர் விபரங்களை பிரதேச செயலாளர்களுக்கு வழங்குமாறும் பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், மக்களுக்குத் தேவையான மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு நாளை (28) முதல் தபால் ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமது பிரிவுகளிலுள்ள மக்களுக்குத் தேவையான மருந்துகளை, வீடுகளுக்கே விநியோகிக்குமாறு அனைத்து மருந்தகங்களின் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய மக்கள் சேவையை முறையாக நடத்திச் செல்வதற்காக நிறுவப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி பணிகளை ஆரம்பித்துள்ளது.
வழிநடத்தல் செயற்பாடுகள் முன்னாள் பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்சவின் தலைமையில் இடம்பெறுகின்றன.

