கடற்றொழிலாளர்களிற்கு இருக்கும் காப்புறுதி வாய்ப்பினை விவசாயிகளிற்கும் வழங்க வேண்டும் என்ற எமது கோரிக்கையின் நியாயப்பாட்டினை மயிலங்காட்டில் இடம்பெற்ற இடி மின்னல் தாக்குதல் உணர்த்தியுள்ளதாக யாழ்.மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபைத் தலைவர. கந்தையா – தியாகலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் யாழ்.மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபைத் தலைவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,இலங்கையின் முக்கிய பொருளாதார வளங்களாகவுள்ள விவசாயம் , மீன்பிடியில் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களிற்கு தற்போது இருக்கும் ஓர் காப்புறுதி வாய்ப்பினை விவசாயிகளிற்கும் வழங்க வேண்டும் என்று நாம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றோம்.
இருப்பினும் அரசு செவிசாய்க்கவில்லை. ஆனால் அந்த காப்புறுதியை வழங்க வேண்டியதன் நியாயப்பாட்டினை மயிலங்காட்டில் 16ம் திகதி இடம்பெற்ற இடி மின்னல் தாக்குதல் உணர்த்தியுள்ளது.
அதாவது குறித்த சம்பவத்தில் ஒரு விவசாயியும் இரு விவசாய கூலித் தொழிலாளர்களும் தொழிலில் ஈடுபட்ட இடத்தில் இடம்பெற்ற அணர்த்தம் காரணமாகவே உயிரிழந்தனர்.
இருப்பினும் அவர்களிற்கும் சாதாரண அணர்த்தங்களின்போது உயிரிழப்பவர்களிற்கு கிடைக்கும் ஒரு லட்சம் ரூபா மட்டுமே உச்ச பட்சமாக கிடைக்கும். இருப்பினும் கடற்றொழிலாளர்கள் தமது நீண்ட போராட்டத்தின் பயணாக ஓர் காப்புறுதி வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
அதாவது வருடம் ஒன்றிற்கு ஆயிரம் ரூபா காப்புறுதிப் பணமாக செலுத்தியிருப்பின் கடலில் தொழிலில் ஈடுபட்ட சமயம் ஏற்படும் அணர்த்தம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.இதனைச் சுட்டிக் காட்டி அந்த வசதியினை எமது விவசாயிகளிற்கும் பெற்றுத் தருமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். இருப்பினும் எந்த அரசுமே கண்டுகொள்ளவில்லை.
இவ்வாறான காரணங்களால்தான விவசாயம் இன்றி அழிவடையும் நிலமைக்கு செல்கின்றது. முன்பு ஒரு காலத்தில் பெரும் அரச உத்தியோகம் புரிந்தவர்களும் பகுதிநேர விவசாயத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் இன்று முழுநேர விவசாயிகூட விவசாயி எனக் கூறினால் ஏளனமாக பார்ப்பார்களோ என்ற மனநிலை ஏற்படுகின்றது.எனவே இவற்றினைக் கருத்தில்கொண்டு விவசாயிகளிற்கும் இந்த காப்புறுதி வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கோருவதோடு எமது இக் கோரிக்கை தொடர்பில் ஏனைய மாவட்ட விவசாய அமைப்புக்கள் அதிகாரிகள் என அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும். எனவும் கோரிக்கை விடுத்தார்.

