இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோர நானும் இந்த மக்களுடன் இணைந்து நடக்கிறேன்; அங்கு தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக்கூற வேண்டும் என தமிழ் உணர்வாளரும், செயற்பாட்டாளருமான வில்லியம் பற்றார்சன் கூறியிருக்கின்றார் .
கனடாவின் பாராளுமன்றத்தை நோக்கி தமிழர்கள் நடத்தும் நீதி கோரும் நடை பவனியில் கலந்துகொண்டு விடுத்திருக்கும் கோரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
“காணாமல் போனவர்களின் நிலையை அறிவதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் நானும் நடந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் உறவினர்கள் வீதியில் நின்று இலங்கை அரசிடம் பதில்களைக் கோரி 1280 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது உறவினர்களைக் காவலில் வைத்துள்ள இந்த இலங்கை அரசாங்கம் , அவர்கள் இருக்கும் இடம், அவர்கள் என்ன குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள், அல்லது அவர்களின் நிலை குறித்து இதுவரை அவர்களுக்கு அறிவிக்கவில்லை. இவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்க போவதாக இலங்கை ஜனாதிபதி கூறி இருக்கிறார். இது பல கேள்விகளை எழுப்புகிறது.
அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் உடல்கள் எங்கே?இது ஏன் நடந்தது? நினைவில் வைத்து கொள்ளுங்கள், இவர்கள் காடுகளில் தொலைந்து போனவர்கள் அல்ல, மாறாக, இராணுவம் அல்லது பொலிஸ் வாகனங்களில் அல்லது காவல் நிலையங்களுக்குள் சென்றவர்கள். அவர்கள் அரசாங்க பராமரிப்பில் இருந்தவர்கள் , ஆனால் அரசாங்கத்தால் ஏன் எந்த பதிலும் கொடுக்க முடியவில்லை?
இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோர நானும் இந்த மக்களுடன் இணைந்து நடக்கிறேன்; அங்கு தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக்கூற வேண்டும்.
இந்த போராட்டத்தில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டுள்ள தாய்மார்கள், மனைவிகள், பிள்ளைகளை ஊக்குவிக்க நானும் நடந்து கொண்டிருக்கிறேன். அரசாங்கம் உங்களை மௌனமாக்க முயற்சிக்கிறது, ஆனால் உங்கள் குரல்கள் எமக்கு கேட்கிறது.
கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்களை விடுவிக்கவும், இந்த குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும், மனித உரிமைகள் மற்றும் கௌரவத்தை மதிக்கும் ஒவ்வொருவரையும் இந்த பயணத்தில் ஆதரவு தருமாறு கோருவதுடன், அனைத்து கனடிய தமிழர்களையும் இந்த நீதி கேட்கும் பயணத்தில் என்னுடன் இணையுமாறு வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் .

