மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களை பெற்று கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 9 ஆசனங்களை தமிழ்த் தேசியத் கூட்டமைப்பு பெற்று வெற்றி ஈட்டியதை தொடர்ந்து திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் விசேட பூசைகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த வழிபாட்டில் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இம்முறை இடம்பெற்ற தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை. மக்களுக்கு பணம் வழங்கி, நன்கொடை கொடுத்து, மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களை பெற்று கொண்டுள்ளனர்.
சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிரித்து உள்ளனர். இதனால் 20 ஆசனங்கள் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட்டமைப்பிற்கு 09 ஆசனம் கிடைத்திருக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.
மேலும் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நீதியும், கெளரவமான பிரஜையாக வாழ தீர்வும் வழங்கப்பட வேண்டும்.
அதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் ஆட்சி அமைக்கும் அரசின் நிலைப்பாட்டை கொண்டு எமது இலட்சியத்தை அடைவோம் என தெரிவித்துள்ளார்.

