Tuesday, September 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீங்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் ?

August 5, 2020
in News, Politics, World
0

இலங்கையில் 1978ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளும் மாறின.அந்தப் புதிய அரசியலமைப்பு படி பாராளுமன்றம் , மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விகிதாசார அடிப்படையில் நடைபெற ஆரம்பித்தன.

6 வருடங்களுக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடத்தப்படும். இடையில் பாராளுமன்றம் ஏதேனும் காரணங்களுக்காக முன் கூட்டியே ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டால் அதற்கேற்ற வகையில் முன்கூட்டியே குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும்.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் அவர்களுக்கு இடங்கள் கிடைக்கும்.அந்தத் தேர்வும் இரண்டு கட்டமாக நடைபெறும்.தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படும்.அந்த வாக்குச்சீட்டில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் அவர்களின் சின்னங்களும் இடம்பெற்றிருக்கும்.அதற்குக் கீழே வேட்பாளர்களுக்குரிய இலக்கங்களும் காணப்படும்.

முதலாவதாக, வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கட்சியின் சின்னத்துக்கு அருகிலுள்ள கட்டத்தில் குறியிட்டு, தமது வாக்கைப் பதிவுசெய்வார்கள்.பின்னர் அதே வாக்குச் சீட்டின் கீழ்ப்பகுதியில், தாம் ஆதரித்த கட்சியின் சார்பில் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் தாம் விரும்பும் மூவருக்கு விருப்பு வாக்கை அளிக்க முடியும்.எனினும் வாக்களார்கள் தனது விருப்ப வாக்கை வழங்காமலும் விடலாம்.

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் தொகுதிவாரியாக இல்லாமல், விகிதாசார அடிப்படையில் நடைபெற்றாலும் நாடு முழுவதும், பல தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தால் முடிவு செய்யப்படும்.

அந்த வகையில் இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் உபரி (போனஸ்) இடங்களும் வழங்கப்படும்.

மொத்தமாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 பேர் மக்களால் தெரிவு செய்யப்பட மீதமுள்ள 29 பேர் தேசியப் பட்டியலின் அடிப்படையில் நியமனம் பெறுவார்கள்.தேர்தலில் நாடுதழுவிய அளவில் கட்சிகள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவகையில் விகிதாச்சார அடிப்படையில் தேசியப் பட்டியல் இடங்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிடும் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும், அந்த மாவட்டத்திலிருந்து தேர்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்துக்கு குறைவாக இருந்தால், தேர்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மூன்று உறுப்பினர்களை கூடுதலாக போட்டியிட நியமிக்க வேண்டும்.

அதேவேளை தேர்ந் தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்துக்கும் இருபதுக்கும் இடைப்பட்டு இருக்குமாயின், தேர்வாகவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக ஆறு பேரை போட்டியிட நியமிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த இலங்கையிலும் கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக 19 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் செறிவாக வாழும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து மிகக் குறைந்த அளவில் 4 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

தேர்தல் முடிந்தவுடன் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக வாக்குகளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கான போனஸ் இடம் அளிக்கப்படும்.பின்னர் பதிவான வாக்குகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்/சுயேச்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படும். அவர்கள் சார்பில் யாரும் பாராளுமன்றம் செல்ல முடியாது.

இதையடுத்து ஐந்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்/சுயேச்சைக் குழுக்களின் கூட்டு வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து கழிக்கப்படும். மீதமிருக்கும் வாக்குகளே உறுப்பினர்களைத் தேர்தெடுக்க செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்படும்.இந்தக் கணக்கீட்டுக்கு பிறகு அந்த மாவட்டத்துக்குண்டான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டு, அந்த எண்ணிக்கையால் செல்லுபடியான வாக்குகள் வகுக்கப்படும்.இதில் கிடைக்கும் எண்ணிக்கையே ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்ய தேவையான வாக்காகக் கருதப்படும்.அந்த எண்ணிக்கையின் அடிப்படையில், கட்சிகள் பெற்ற வாக்குகளை வைத்து அவர்களுக்கு எவ்வளவு இடங்கள் என்பது முடிவாகிறது.

விருப்ப வாக்குகள் – உறுப்பினர்கள் தேர்வு

ஒவ்வொரு உறுப்பினரும் தேர்வாக அந்தந்த தேர்தல் மாவட்டத்தில் எவ்வளவு வாக்குகள் தேவையோ, அது முடிவான பிறகு, அம்மாவட்டத்தில் போட்டியிட்ட ஒவ்வொரு கட்சி/சுயேச்சைக் குழு பெற்றுள்ள வாக்குகளால் அது வகுக்கப்படும்.அதன் அடிப்படையில் கட்சிகளுக்கு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுக் கொண்டே வரப்படும்.பின்னர் ஒரு உறுப்பினரைத் தேர்வுசெய்ய தேவைப்படும் வாக்குகளைப் பெறாத கட்சி விலக்கப்படும்.

இதையடுத்து களத்தில் இருக்கும் கட்சிகளிடம் மீதமுள்ள வாக்குகளின் அடிப்படையில் கூடுதல் வாக்குகளை பெற்றவர்களுக்கு, இன்னும் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் இடங்கள் எஞ்சியிருக்குமாயின் அது ஒதுக்கீடு செய்யப்படும்.இறுதியாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்று முடிவான பிறகு, அந்தக் கட்சிகளின் சார்பில் விருப்ப வாக்குகள் யாருக்கு அதிகம் என்று தீர்மானிக்கப்படும்.

அந்தப் பட்டியலின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளனவோ அதற்கேற்ற வகையில் மேலிருந்து கூடுதலாக வாக்குகள் பெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

செல்லாத வாக்குகள்

வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டைப் பெற்றுக்கொண்டவுடன் முதலாவதாக தாம் விரும்பும் கட்சி/சுயேச்சைக் குழுவுக்கான வாக்கைச் கட்டாயம் குறியிட்டு செலுத்த வேண்டும்.இல்லையெனில் அந்த வாக்கு செல்லாத வாக்காகிவிடும்.அதேபோன்று விருப்ப வாக்கு என்று வரும்போது, மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கைப் பதிவு செய்தால் அந்த வாக்கும் உறுப்பினர் தேர்வுக்கு செல்லாத வாக்கு என அறிவிக்கப்படும்.

கிருபாகரன்

Previous Post

வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் சூடு

Next Post

ஜனநாயக உரிமை யைப் பயன்படுத்துமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு

Next Post

ஜனநாயக உரிமை யைப் பயன்படுத்துமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures