மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பாக 269 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை காலை வரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை இதுவாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக தேர்தல் வன்முறைகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகத்திற்கு இந்த 269 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவற்றில் சட்டவிரோத பதாதைகள், சுவரொட்டிகள் தொடர்பாக 98 முறைப்பாடுகளும், அரச ஊழியர்கள் அரசியலில் ஈடுபட்டமை தொடர்பாக 30 முறைப்பாடுகளும், அன்பளிப்பு வழங்கல் தொர்பாக 42 முறைப்பாடுகளும், கூட்டங்கள் ஊர்வலங்கள் தொடர்பாக 52 முறைப்பாடுகளும், அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக 10 முறைப்பாடுகளும், நியமனங்கள் இடமாற்றம் தொடர்பாக 3 முறைப்பாடுகளும், சொல்லால் அச்சுறுத்தல் செய்தமை தொடர்பாக 3 முறைப்பாடுகளும், இலத்திரனியல் ஊடக துஷ்பிரயோகம் தொடர்பாக 2 முறைப்பாடுகளும், சமுக ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் தொடர்பாக 4 முறைப்பாடுகளும், வலிந்து தாக்குதல் கும்பலாகத் தாக்கதல் தொடர்பில் 6 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொய்ப்பிரச்சாரம் செய்தமை தொடர்பில் 2 முறைப்பாடுகளும், அஞ்சல் வாக்கு தொடர்பாக 1 முறைப்பாடும், சட்டவிரோத நிகழ்வு ஏற்பாடு செய்தமை தொடர்பில் 2 முறைப்பாடுகளும், வாக்காளர் உபசரிப்பு தொடர்பில் 1 முறைப்பாடும், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தல் தொடர்பில் 3 முறைப்பாடுகளும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 2 முறைப்பாடுகளும், மதத்தலைவர்கள் ஊடாக பிரசாரம் செய்தமை தொடர்பில் 5 முறைப்பாடுகளும், தீ வைப்பு எரியூட்டல் போன்றவை தொடர்பாக தொடர்பில் 1 முறைப்பாடும், பொதுவானவற்றில் 2 முறைப்பாடுகளுமாக மொத்தம் 269 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இம்முறைப்பாடுகளில் தேர்தல் சட்டவிதி மீறல் தொடர்பாக 257 முறைப்பாடுகளும், தேர்தல் வன்செயல்கள் தொடர்பில் 12 முறைப்பாடுகளும் இனங்காணப்பட்டுள்ளன.
இவற்றில் 172 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய 97 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.