அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் குறித்த பேரவையின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
அத்தோடு, இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது குறித்தும் இதன்போது கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேநேரம் நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றினால் முன்வைக்கப்பட்டுள்ள காலாண்டு முன்னேற்ற அறிக்கைகள் இதன்போது மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும் அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.