சுதந்திர தினத்தையொட்டி 16 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட, முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, காஞ்சிபுரம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கே.வீரமணி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ப.அசோக் நடராஜன், மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் வெ.சந்திரசேகரன், சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காவல்துறை ஆய்வாளர் ஜா.நாகராஜன், சென்னை குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை காவல்துறை ஆய்வாளர் சி.உமாதேவி, சென்னை குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை ஆய்வாளர் ஆ.சிவ ஆனந்த்,
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல்துறை ஆய்வாளர் ஜே.அன்பு பிரகாஷ், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல்நிலைய ஆய்வாளர் பி. பார்த்திபன், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜே.மலர்கொடி, திருச்சி ரயில் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மு. சுந்தரமூர்த்தி, இதேபோன்று, பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி, சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை இயக்குநர் கே.ஜெயந்த் முரளி, சென்னை நுண்ணறிவுப் பிரிவு (உள்நாட்டுப் பாதுகாப்பு) காவல் துறைத் தலைவர் சி.ஈஸ்வரமூர்த்தி, திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை துணை ஆணையர் ஆ.மயில்வாகனன். இவர் தற்போது மதுரை மாநகரில் காவல்துறை துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். சேலம் மாவட்டம் ஓமலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மு.சந்திரசேகரன், கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை ஆய்வாளர் எஸ்.விஜயன், திருச்சி இருப்புப் பாதை காவல் மாவட்டம், விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை பெண் காவலர் ஜே.சுதா ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள். மேற்கண்ட விருதுகள், முதலமைச்சர் பங்கேற்கும் சுதந்திர தின விழாவில் மேற்சொன்ன காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.