வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வவுனியா சட்டத்தரணிகளின் முயற்சியால் இன்றைய தினமே (11.05.2023) பிணையில் செல்ல வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
15 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இணைந்து வாதாடி பிணையில் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும், பூசகரும் இருப்பதனால் அதே வழக்கில் அவர்களை சந்தேகநபர்களாக பெயரிடுவது வழக்கிற்கு முரணாக அமையும் என்பதை நீதிமன்றுக்கு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய ஆலயத்தின் கட்டுமானங்களையோ மாற்றங்களையோ ஏற்படுத்தக்கூடாது என நீதிமன்றம் எச்சரித்துள்ளதுடன் பூஜை வழிபாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று (11.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விக்கிரகங்கள் மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது.
சங்காபிஷேக நிகழ்வு
இதனையடுத்து ஆலயத்தில் பூஜை நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்ததுடன் நேற்றைய தினம் சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அதில் மழையினையும் பொருட்படுத்தாமல் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை விசாரணை ஒன்றிற்காக ஆலயநிர்வாகத்தினரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு நெடுங்கேணி பொலிஸாரால் நேற்றைய தினம் (10.05.2023) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விசாரணைகள்
இதனையடுத்து ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாக உறுப்பினர் உட்பட இருவர் இன்றையதினம் காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று (11.05.2023) வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.