ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு 7 தமிழர்கள் தகுதி!
பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 121 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் 54 பேர் வீராங்கனைகள் ஆவர்.
ஒலிம்பிக் வரலாற்றில் 100க்கும் அதிகமான இந்தியர்கள் பங்கேற்பது இது தான் முதன்முறையாகும். கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 83 இந்தியர்கள் தான் கலந்து கொண்டனர்.
மல்யுத்தம், குத்துச்சண்டை, ஹொக்கி, கோல்ப், வில் வித்தை, ஜிம்னாஸ்டிக், ஜூடோ, துடுப்பு படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், தடகளம், பேட்மின்டன் பளு தூக்குதல் ஆகிய 15 விளையாட்டுகளில் 66 பிரிவுகளில் இந்தியர்கள் பங்கேற்கிறார்கள்.
இதில் தமிழகத்தில் இருந்து 7 பேர் தகுதி பெற்றுள்ளனர். பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், ஹொக்கி வீரர் ருபீந்தர் பால், தடகளத்தில் கணபதி, ஆரோக்கிய ராஜீவ், தருண், மோகன்குமார் ஆகிய 7 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக் போட்டி, அடுத்த மாதம் 5ம் திகதி முதல் 21ம் திகதி வரை பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடக்கிறது.