மூதூர் – பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும், உயிரிழந்த பொது மக்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டு, பொதுச்சுடரினை ஏற்றிவைத்ததுடன், இலங்கையின் வடக்கு, கிழக்கில் இதே 16ஆம் திகதி ஆடி மாதம் 1989ஆம் ஆண்டில் தமிழ் மக்களை இலக்குவைத்து பல்வேறு கிராமங்களில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றமை தொடர்பான நினைவுரையையும் நிகழ்த்தியிருந்தார்.
இந்த பூஜை நிகழ்வில் உயிர் நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுக்களின் உறுப்பினர்கள், பல்வேறு சங்கங்களின் அங்கத்தவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.