கடந்த காலத்தைப் போன்றே இன்றும் கூட்டணி அல்லது முன்னணியின்றி எவராலும் ஆட்சியை கைப்பற்ற இயலாது எனவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இடசாரி முற்போக்கு முன்னணியாக ஒன்றிணைந்தவர்களினாலேயே முடியும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டுக்காக அரசியல் செய்யும் குழுவினரின் முன்னணியை உருவாக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
திருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என்றும், இன்று வலுப்பெற்று வரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் உருவாகும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாக வாழக்கூடிய உரிமையை உறுதி செய்வது காலத்தின் கட்டாயமாக அமைந்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.