உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாதிருக்குமாறு வலியுறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமையின் காரணமாக அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மின்சக்தி அமைச்சின் செயலாளர்மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 க்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மற்றும் மின் சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரியொருவர் ஆகியோர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.
இதன் போது பரீட்சை நிறைவடையும் வரை எவ்வாறு மின் விநியோகத்தை துண்டிக்காமலிருப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
எனினும் இந்த பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்காக இன்று புதன்கிழமை மாலை மீண்டும் மின் சக்தி அமைச்சின் செயலாளருக்கும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இவர்களுக்கு மேலதிகமாக இலங்கை மின்சாரசபை தலைவர் , பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் , இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பவற்றின் தலைவர்களுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.