நோர்வே நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது மனைவியின் வேலைவாய்ப்புக்காக பதவியை ராஜிநாமா செய்துள்ளது பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது.
நார்வே நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி கெடில் சால்விக் ஆல்சன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
நேற்று கெடில் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். இதுகுறித்து, அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அமைச்சராக எனது பணியை சிறப்பாகச் செய்ததாக கருதுகிறேன். எனது மனைவி டோன் சால்விக் ஆல்சன் பல்வேறு வகைகளில் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்.
தற்போது, அவருக்கு அமெரிக்காவிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவருக்கு நன்றிக்கடன் செலுத்த விரும்புகிறேன். மனைவி, குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு செல்கிறேன். எனவே, அமைச்சர் பதவியை நான் ராஜிநாமா செய்துவிட்டேன் என்று கெடில் கூறினார்.
மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அமைச்சர் பதவியை துறந்த கெடில் ஆல்சனை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.