இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நெருங்கி பழகிய தோழி கண்டுகொள்ள மறுத்த காரணத்தால் கோபமடைந்த இளைஞர் அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதரபாத்தை சேர்ந்த மணி என்ற இளைஞர், இவர் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் சுதா என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்துள்ளார்.
மணி குஜராத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சுதாவின் குணங்கள் பிடித்ததால் மணிக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. இதனையடுத்து தனது காதலை சுதாவிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் சுதா அதனை ஏற்கவில்லை.
இதனையடுத்து தொடர்ச்சியாக தன்னை காதல் செய்யும்படி சுதாவை நிர்பந்தித்து வந்திருக்கிறார் மணி. ஒருகட்டத்தில் மணி மீது சுதாவிற்கு வெறுப்பு ஏற்பட்டதால் அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.
மணி எவ்வளவோ முயற்சி செய்தும் சுதா அவரிடம் பேசவில்லை. எனவே சுதாவிற்கு வேறு ஒருவருடன் காதல் இருக்கலாம் என மணி சந்தேகம் அடைந்தார்.
இதனையடுத்து குஜராத்திலிருந்து ஹைதரபாத் வந்த மணி சுதா வீட்டிற்கு சென்றார். சுதாவின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து வீட்டிற்குள் சென்ற மணி அவரிடம் பேச்சு கொடுத்திருக்கிறார்.
அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து சுதாவின் தொண்டையை கத்தியால் அறுத்த மணி அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சுதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சுதா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.