மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உண்மையில் பல ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. 20 ஏக்கருக்கு அதிகமான காணி விடுவிக்கப்படவுள்ளன.
மேலும் 100 ஏக்கர் காணிவரை விடுவிக்கப்படவுள்ளது. இவை அனைத்தையும் தன்னிச்சையாகவே செய்ய முடிகின்றது. இதற்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கவில்லை. அவர்கள் வெறுமனே காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற கருத்துக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றனர்.
மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும். அதேபோன்று அரச திணைக்களங்களின் காணிகளும் உரிய முறைப்படி பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.