ஆரம்ப காலத்தில் விவசாயிகள் சமூக உணர்வோடு செயற்பட்டது போன்று செயற்பட்டால் பன்றி நெல்லை கட்டுப்படுத்த முடியும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் வி.பேரின்பராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட பள்ளிமடு கண்ட விவசாயிகளுக்கு நெல் வயலில் களை நெல் (பன்றி நெல்) முகாமைத்துவ விழிப்பூட்டல் கருத்தரங்கு பள்ளிமடு பள்ளிவாயலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-
தற்போது விவசாயத்தில் வந்துள்ள களை நெல்லினை (பன்றி நெல்) அழிப்பதற்கு விவசாயிகள் அனைவரும் சமூக உணர்வோடு செயற்பட வேண்டும். ஆரம்ப காலத்தில் விவசாயிகள் குழுக்களாக சமூக உணர்வோடு செயற்பட்டனர்.
ஆனால் தற்போது குழுச் செயற்பாடுகள் குறைவடைந்துள்ளது. எனது வயலில் உள்ளதை அகற்றினால் சரி மற்றையவர் எப்படி போனாலும் பரவாயில்லை என்ற மனநிலை வந்தமையால் இவ்வாறான நிகழ்வுகளை ஒருமித்து செய்வதற்கு கடினமாக உள்ளது.
விவசாயிகள் குழுக்களாக செயற்பட முடியாமல் விட்டால் பின்விளைவு ஆபத்தாக அமையும். ஆரம்பத்தில் பன்றி நெல்லின் தாக்கத்தினை அறிந்து கொண்டு நடவடிக்கைகளை ஆரம்பித்தால் எதிர்காலம் நல்ல சுபீட்சமாக அமையும் . முழு இடமும் பரவிய பின் கட்டுப்படுத்த தொடங்கினால் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். பன்றி நெல்லினை கட்டுப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை நம்மில் வர வேண்டும்.
பெரும்போக செய்கையில் தான் பன்றி நெல் வருகின்றது. ஆனால் தற்போது சிறுபோகத்திலும் வந்துள்ளது. இதனை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தும் முகமாக விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வுகளை நடாத்தி வருகின்றோம்.
எனவே சிறுபோகத்தில் காணப்படுகின்ற பன்றி நெல்லினை 60 வீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் அடுத்த போகத்தில் அடியோடு அழித்து விட நடவடிக்கை மேற்கொள்ளலாம். பன்றி நெல்லானது உயர்ந்து வளர்வதால் அதனை வெட்டி விட முடியும். அவ்வாறு பூக்கும் போதே வெட்டி விட்டால் தாக்கத்தினை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஓட்டமாவடி விவசாயப் போதனாசிரியர் எம்.டி.எம்.ஜமால்டீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக விவசாயப் பணிப்பாளர் வை.எம்.,க்பால், விவசாய திணைக்களத்தின் வடக்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ.சுகந்ததாசன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன், இந்நிகழ்வில் வாகரை விவசாயப் போதனாசிரியர் ஆர்.பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தற்போது நெல் வயலில் களை நெல் (பன்றி நெல்) வருவதனை எவ்வாறு தடுக்கலாம் எனவும், களை நெல் (பன்றி நெல்) விளைந்தால் அதனை எவ்வாறு அழிக்கலாம் எனவும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.