வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி, ஜடேஜா என விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்த நேரம்… வந்துவிழுந்தது ஒரு பிரபல ட்வீட்டரின் ட்வீட்… ”முதியோர் இல்லம் பரவால்லயே… 120 தாண்டிருவாங்க போல…” ஆமாம் அந்த ட்வீட்டில் உண்மையில்லாமல் இல்லை. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப்பெரிய தோல்வியை சந்திக்காமல் 120 ரன்கள் எடுத்தாலே போதும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், அப்போது எல்லோரும் பிராவோ பிட்ச்சில் இருப்பதையே மறந்துவிட்டார்கள்.
டெத் ஓவர்களில் பந்து வீசுவதாக இருந்தாலும் சரி, பேட்டிங்காக இருந்தாலும் சரி ‘நான் இருக்கிறேன்’ என்று எப்போதுமே அதிரடி ஆட்டம் ஆடுபவர் பிராவா. வெறும் மூன்று ஓவர்களே கையில் இருக்கின்றன. இரண்டு விக்கெட்டுகள்தான். வெற்றிக்கு 18 பந்துகளில் 47 ரன்கள் வேண்டும் என்கிற நிலை. யாருமே எதிர்பாராதவகையில் மெக்ளினிகன் வீசிய அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர், 1 பவுண்டரி என மொத்தம் 20 ரன்கள் எடுத்ததார் பிராவோ. வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் என டார்கெட் சுருங்கியது.அடுத்த ஓவர்தான் பிராவோவின் தாக்குதல் இன்னும் வெறிகொண்டது. பும்ரா வீசிய இந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் பிராவோ. கடைசிப் பந்தையும் பிராவோ அடிக்கமுயற்சி செய்ய அது கேட்ச் ஆனது. பிராவோ அடித்த அந்த 5 சிக்ஸர்களும், மெக்ளீகன், பும்ரா வீசிய இரண்டு ஓவர்களும்தான் மேட்ச்சின் திருப்புமுனை.
கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் உள்ளே வந்தார் காயத்துடன் வெளியேறியிருந்த கேதார் ஜாதவ். கிட்டத்தட்ட ஒற்றைக்காலில் பேட்டிங் ஆடிய ஜாதவின் பேட்டிங் மிகமுக்கிமானது. கேதர் ஜாதவால் ஓட முடியாது என்பது ஒரு நிலை என்றால் எதிர்முனையில் இம்ரான் தாஹிர் என்பதால் ஓடியும் உபயோகம் இல்லை. ஆறு பந்துகளையும் ஒருவரே எதிர்கொள்ள வேண்டும் என்பதால் பதற்றதைத் தணித்துவிட்டு பெளலரை கவனித்தார் ஜாதவ். முதல் மூன்று பந்துகளையும் ஃபீல்டர்களுக்கு இடையே தட்டிவிடவே முயற்சி செய்தார் ஜாதவ். ஆனால் அதேசமயம் பெளலரின் லைன் அண்ட் லெந்தைக் கணித்துவிட்டார். முஸ்டஃபைசுர் ரஹ்மான் ஒரே லைனிலேயே பந்துவீசுகிறார் என்பதை உணர்ந்துகொண்ட ஜாதவ் நான்காவது பந்தை லாவகமாகப் பின்னால் தட்டி சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அடுத்தப் பந்து கிளீன் ஷாட்… பவுண்டரி. இப்படித்தான் மும்பையை கடைசி நேரத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ்.