ஐ.பி.எல்லில் விளையாடும் அணிகளிலேயே அதிக கிளாமர் கொண்ட அணி எதுவென்றால் யோசிக்காமல் சொல்லிவிடலாம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் என. ஐ.பி.எல் என்ற தொடர் தொடங்கப்படவுள்ளது என்ற தகவலைவிட அதில் கொல்கத்தா அணியை ஷாரூக்கான் வாங்குகிறார் என்ற தகவலின் ரீச் அதிகம். அதனாலேயே என்னவோ ஐ.பி.எல்லின் முதல் ஆட்டமே கொல்கத்தாவிற்குத்தான். ஜிகுஜிகுவென அவர்கள் களமிறங்கிய முதல் ஆட்டத்தில் மெக்கல்லம் ஆடிய ருத்ரதாண்டவம் கொல்கத்தாவிற்கு மட்டுமல்ல, மொத்த ஐ.பி.எல்லுக்கும் கிடைத்த கிராண்ட் ஓபனிங்.
கிராண்ட் ஓபனிங் கடைசியாக வடிவேலுவின் பன்ச் டயலாக்காக மாறிப்போனதுதான் சோகம். முதல் மூன்று சீசன்களில் லீக் சுற்றோடு வெளியேறியது கொல்கத்தா. 2011 கம்பீர் கொல்கத்தாவுக்காக களமிறங்கிய முதல் சீசன் ப்ளே ஆஃப் வரை அழைத்துச் சென்றார். அடுத்த ஆண்டே கோப்பையும் வாங்கினார். 2014-ல் திரும்பவும் கோப்பை. அப்படி திறம்பட வழிநடத்திய வீரரை டெல்லிக்கே தாரை வார்த்துவிட்டுத்தான் இந்த ஆண்டின் ஏலத்தை தொடங்கியது கொல்கத்தா நிர்வாகம்.
எப்படி இருக்கிறது அணி?
பிளேயர்களை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பை எல்லா அணிகளும் பயன்படுத்திக்கொள்ளும்தான். அதிலும் இந்திய வீரர்களை தக்கவைத்துக்கொள்ளவே எந்த அணி நிர்வாகமும் விரும்பும். ஆனால் சுனில் நரைன், ரஸ்ஸல் என கொல்கத்தா தக்க வைத்த இருவருமே வெளிநாட்டு வீரர்கள். அடுத்ததாக ஏலத்தில் எடுத்த க்றிஸ் லின், மிட்செல் ஸ்டார்க் இருவரும் கூட வெளிநாட்டு வீரர்கள்தான். இந்த நான்கு வீரர்களுக்காக மட்டுமே 40 கோடிகளை செலவழித்துவிட்டது அணி நிர்வாகம். எஞ்சிய 40 கோடிகளில்தான் ஏனைய 21 வீரர்களை எடுக்கவேண்டும். இந்த நெருக்கடி வீரர்கள் தேர்விலும் எதிரொலித்தது.