சர்வதேச அரங்கில் இந்திய ரசிகர்களிடம் இந்திய அணியைத் தவிர்த்து மிகவும் பிடித்த அணி எது என்று கேட்டால் சட்டென்று நியூசிலாந்து என்று குறிப்பிடுவார்கள். அதுபோல ஐ.பி.எல் போட்டிகளில் ஏறக்குறைய எல்லோருடைய இரண்டாவது சாய்ஸ் அணியாக இருப்பது கிங்ஸ் 11 பஞ்சாப் அணி தான்.
முதல் இரண்டு வருடங்களுக்கு யுவராஜ் சிங், பின்பு சங்கக்காரா எனத் தொடங்கி, ஆடம் கில்க்றிஸ்ட் (3 வருடங்கள்), ஜார்ஜ் பெய்லி, மில்லர், முரளி விஜய், க்ளென் மேக்ஸ்வெல் என சீசனுக்கு ஒரு கேப்டன் என தள்ளாடித் திணறினாலும், பெய்லியின் தலைமையில் இறுதிச்சுற்று வரை ஒரு முறை முன்னேறியது. இதுவரை பெரிதும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களை நம்பிய நிர்வாகம், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை 7.6 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்து, அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பையும் கொடுத்துள்ளது.
கடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தோடு அஸ்வினை இந்திய அணி பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை (ஒரு தின & டி20 ஆட்டங்களுக்கு). இதற்காகவே உள்ளூர் போட்டிகளில் தன்னுடைய பிரதான ஆஃப் ஸ்பின்னை கொஞ்சம் ஓரம்கட்டி வைத்து கிட்டத்தட்ட அணில் கும்ப்ளேவை ஞாபகப்படுத்தும் பௌலிங் ஆக்ஷனில் லெக் ப்ரேக்கும் பயின்று வருகிறார். இம்முறை அணிக்கு ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ் பயிற்சியாளராகவும், சேவாக் அணியை ஒருங்கிணைத்து வழிநடத்துபவராகவும் செயல்படுகிறார்கள்.