நூலிழையில் கை நழுவிப்போன வாய்ப்பு: 130 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்ட தீபா கர்மாகர்
ரியோ ஒலிம்பிக் மகளிர் ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவு இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் நான்காவது இடம் பெற்றார்.
இதன் மூலம், இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நூலிழையில் கை நழுவிப்போனது.
இறுதிப்போட்டியில், தீபா கர்மாகர் 15.066 புள்ளிகளைப் பெற்றார். 15.966 புள்ளிகளை பெற்ற அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் தங்கப் பதக்கம் வென்றார். ரஷ்ய வீராங்கனை மரியா 15.253 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜியுலியா, 15.216 புள்ளிகள் வென்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்நிலையில், தீபா கர்மாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் மிக கடினமாக முயற்சி செய்தேன், ஆனால் இந்தியாவின் பதக்க கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.
அதனால், 130 கோடி மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் மக்களாகிய நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள். நடந்ததை குறித்து நான் மிகவும் வருந்தி கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டி தான், தீபா பங்கேற்கும் முதல் ஒலிம்பிக் போட்டி. ஒலிம்பிக் வரலாற்றில் வால்ட் பிரிவின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் தீபா கர்மாகர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dear 1.3 billion peoples, can’t make your dreams come true. Sorry again for that, can’t stop blaming myself for what happens!
— Dipa Karmakar (@idipakarmakar) August 14, 2016