நரசிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம்: தேசிய ஊக்க மருந்து தடுப்பாணையம் அனுமதி
ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேசிய ஊக்க மருந்து தடுப்பாணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் கடந்த டெல்லி காமன்வெல்த் போட்டிகளில் தங்கமும், 2014 ஆசிய விளையாட்டில் வெண்கலமும் வென்றவர்.
2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கிலோ) வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 25-ல் இவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தடை செய்யப்பட்ட ‘மெட்டாடியனன்’ என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது ‘ஏ, பி’ என இரு மாதிரிகளிலும் உறுதியானது.
இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நரசிங் யாதவ் கலந்து கொள்வது கேள்விக்குறியானது. இதனால் அவருக்குப் பதிலாக பிரவீண் ராணா மாற்று வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தேசிய ஊக்க மருந்து சோதனை அமைப்பின் ஆணையம் நரசிங் யாதவ் பிரச்னை குறித்து விசாரணை நடத்தியது.
அதில் தமக்கு தெரியாமல் உணவில் ஊக்கமருந்தை கலந்து விட்டுள்ளனர் என்று நரசிங் யாதவ் புகார் தெரிவித்தார். இது தமக்கு எதிராக நடந்த சதி என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், ஆணையம் முன் ஆஜராகி 600 பக்க விளக்கத்தையும் சமர்பித்தார். மொத்தம் மூன்றரை மணி நேரம், மூடப்பட்ட அறையில் விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
அதன்படி இன்று வழங்கிய தீர்ப்பில், நரசிங் யாதவ் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். நரசிங் மீது எந்த தவறும் இல்லை. தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளார் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் அவர் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இந்திய மல்யுத்த பெடரேஷன் அனுமதியைப் பெற்று இந்திய ஒலிம்பிக் சங்கம் இதற்கான முயற்சியை மேற்கொள்ளும்.