தனித்துவமான நடிப்புத் திறன் கொண்ட நடிகர் அருள்நிதி கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அருள்வான்’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் கணேஷ் விநாயகன் கதை எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அருள்வான்’. இதில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் , கிருத்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ஃபீல் குட் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஜி. சரவணன் தயாரித்திருக்கிறார். சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் இப்படத்தினை வழங்குகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.
நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவான ‘ராம்போ’ கடந்த ஆண்டில் பட மாளிகையில் இல்லாமல்… நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியானது என்பதும் ,அவரது நடிப்பில் தயாராகி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘டிமான்டி காலனி 3 ‘திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியாக உள்ள தருணத்தில் ‘அருள்வான்’ விரைவில் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












