உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான லியோ மெஸ்சி கேப்டன்ஷிப்பில் தோனியின் பாணியை கடைபிடிக்கப்போவதாக கூறியுள்ளது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் வரும் ஜூன் 14ம் தேதி கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய மெஸ்சி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, கேப்டன்ஷிப்பில் தோனியின் அணுகுமுறையை பின்பற்ற போவதாகவும், அதனால் நிச்சயம் மாற்றங்கள் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். லியோனல் ஆண்ட்ரே மெஸ்சி, லா லிகா அணி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா தேசிய அணி ஆகியவற்றுக்காக விளையாடி வருகிறார். இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக மெஸ்சி இருந்து வருகிறார். 21 வயதிற்குள்ளாகவே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
இதனால் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகம். இவருடைய அதிரடியான ஆட்டம் மற்றும் ஸ்டைலான கோல் அடிக்கும் முறையால் இவர், கால்பந்தாட்ட சாதனையாளரான டீகோ மாரடோனாவுடன் ஒப்பிடப்படுகிறார். மாரடோனாவும் இவரை தன்னுடைய “வாரிசு” என்றே அறிவித்துள்ளார்.
அந்த அளவிற்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட, மிகவும் பிரபலமான மெஸ்சி, இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தோனியின் பாணியை பின்பற்றுவேன் என்று கூறியுள்ளது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மூன்றாவது முறையாக தோனி கோப்பையை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
அதோடு இந்தத் தொடரில் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . ஒவ்வொரு போட்டியிலும் தோனியின் சிக்ஸரை பார்க்க ரசிகர்கள் அவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள். வின்டேஜ் தோனியை பார்க்க முடிந்தது என்று பலரும் கூறியிருந்தார்கள். கேப்டன் கூல் என்று வர்ணிக்கப்படும் தோனி, இந்த தொடர் முழுவதும் தனது பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் தோனியின் பாணியை பின்பற்ற இருப்பதாக மெஸ்ஸி கூறியுள்ளார்.