சிங்கள பௌத்த பேரினவாத செயற்பாட்டாளர்களே குருந்தூர் மலை பொங்கல் விழாவுக்கு இடையூறு விளைவித்தார்கள் என யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் வேலன் சுவாமிகள் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்தின் சக்ரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவனார் ஆலய பொங்கல் விழாவை நடத்த நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். குறித்த ஏற்பாடு நடவடிக்கைகளுக்கு முதலில் தொல்பொருள் திணைக்களத்தினர் வருகைதந்து இடையூறு விளைவித்தனர்.
மேலும் அவர்கள் இந்த இடத்தில நெருப்பு பற்றவைக்க முடியாது என தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் முகமாக எமது அரசியல் செயற்பாட்டாளர்கள் “அதற்கான எழுத்துமூல ஆவணத்தை வைத்துள்ளீர்களா?” என தொல்பொருள் திணைக்களத்தினரிடம் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு அவர்களால் எவ்வித பதிலும் வழங்க முடியவில்லை. இதன் பின்னரே பௌத்த தேரர்கள் தலைமையில் அங்கே வருகைதந்த, சில சிங்கள பௌத்த பேரினவாத செயற்பாட்டாளர்கள் பொங்கல் விழாவிற்கு தடையை ஏற்படுத்தினார்கள்.
தொல்பொருள் திணைக்கள அதிகாரி பொங்கல் விழாவிற்க்கான உத்தரவை வழங்கிய போதும், பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒரு குறித்த அதிகாரி திடீரென வருகைதந்து தீயை சப்பாத்து காலால் அணைத்துவிட்டார்.
இந்த செயல் இலங்கை பொலிஸாரின் ஒரு அராஜகமானச்செயல்.” என தெரிவித்தார்.