டெல்லியில் கடும் பனி மூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவுகிறது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
பனிமூட்டத்தால் பகல் நேரத்தில் கூட வாகனங்கள் முகப்பு விளக்குடன் செல்கின்றன. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பனிமூட்டத்தால் இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் போதிய வெளிச்சம் இன்றி காணப்படுகின்றன.
பனிமூட்டம் காரணமாக பிறமாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் ரயில்கள் தாமதமாக வருகின்றன. 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 27 ரயில்களின் பயண நேரம் இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் ரயில் பயணிகள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் சமீபமாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
இதனால், காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் வழக்கத்துக்கு மாறாக பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு டெல்லியில் லேசான மழை பெய்தது.
இதனால் காற்று மாசுபாடு அளவு சற்று குறைந்துள்ளது.