கேரளாவை உலுக்கிய ஜிஷா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசாம் இளைஞரைக் குற்றவாளி என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவில், சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், ஜிஷா தனது வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம், கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் மீதான விசாரணையை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், ஏ.டி.ஜி.பி., சந்தியா தலைமையில் அமைந்த தனிப்படை, ஜிஷா கொலை வழக்கில் தொடர்புடையதாக அசாம் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்தனர்.
இதுதொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட அசாம் இளைஞர் அமீருல் இஸ்லாம் என்பவர்தான் குற்றவாளி என இன்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிக்கு, தண்டனை தொடர்பாக நாளை இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.