உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிகளை சோனி ஈஎஸ்பிஎன் சேனல் முதல்முறையாக தமிழ் வர்ணனையுடன் ஒளிபரப்ப உள்ளது. இது குறித்து சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் துணைத் தலைவர் பிரசன்னா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கால்பந்து விளையாட்டுக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும், உலக கோப்பை போட்டிகளை ரசிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்தியாவை பொருத்தவரை ஆங்கிலத்தை விட, பிராந்திய மொழி ஒளிபரப்புக்குதான் அதிக ரசிகர்கள் உள்ளனர். எனவே, உலக கோப்பை கால்பந்து போட்டிகளை முதல் முறையாக உள்ளூர் மொழி வர்ணனையுடன் ஒளிபரப்ப உள்ளோம். அதன்படி ஆங்கிலத்துடன் தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நேரடி ஒளிபரப்பை கண்டு களிக்கலாம். ஜூன் 14ம்தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை சோனி ஈஎஸ்பிஎன் சேனலில் தமிழில் போட்டிகள் ஒளிபரப்பாகும். எங்கள் சேனலில் ஒளிபரப்பாகும் கால்பந்து போட்டிகளை இந்தியாவில் ஆண்டுக்கு 30 கோடி பேர் பார்க்கின்றனர். ஆனால் உலக கோப்பை போட்டிகளை மட்டுமே 20 கோடி பேர் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கிறாம்.