செவ்வாய் கிரக மார்டியன் ஏரி படுகையில் உயிர்கள் இருப்பதற்கான மூலக்கூறுகளை கியூரியாசிட்டி விண்கலம் கண்டு பிடித்துள்ளது.அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக 2011ல் ‘கியூரியாசிட்டி ரோவர்’ எனப்படும் விண்கலத்தை அனுப்பியது. அது இந்த கிரகத்தில் தரையிறங்கி வெற்றிகரமாக பல்வேறு சோதனைகளை செய்து வருகிறது.
இந்த கிரகத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான மார்டியன் ஏரிப்படுகை உள்ளது. இங்கு, செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான மூலக்கூறுகள் இருப்பதை கியூரியாசிட்டி கண்டு பிடித்துள்ளது. நாசா விஞ்ஞானிகளுக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்த ஏரிப்படுகைக்கு அருகே அமைந்துள்ள 3 கோடி ஆண்டுகளுக்கு முந்தையை பாறை படிமங்களில் மிகவும் கடினமான உயிர் மூலக்கூறுகள் காணப்படுகின்றன. மேலும், இங்குள்ள மீத்தேன் அளவு அடிக்கடி மாறுபடுவதும் கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த உயிர் மூலக்கூறுகளில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் உயிருடன் சம்பந்தப்பட்டவை. இந்த புதிய கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வுகளை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவும் என்றும், இந்த கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான ஆதாரங்களை தொடர்ந்து தேடுவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளன என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.