சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறவிருந்த சென்னை சூப்பர்கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று, நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக 2,000-க்கும் மேற்பட்டவர்கள் சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், போட்டியின்போது மைதானத்தினுள் செருப்பும் வீசப்பட்டது. இந்தநிலையில், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறவுள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த டிக்கெட் விற்பனையை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.