ஸ்டேடியோ ஒலிம்பிகோ மைதானம் கண்ணீரால் நிரம்பியிருக்கிறது. களத்துக்குள் இருக்கும் வீரர்கள் அழுகிறார்கள். கேலரியில் இருக்கும் ரசிகர்களும் அழுகிறார்கள். `அவே டீம்’ ரசிகர்களும் அழுகிறார்கள். கேமராக்கள் திரும்பிய இடமெல்லாம் அழுகை மட்டுமே. ரோமா அணியின் ரசிகன் அந்தக் கொடியை மார்பில் ஒத்திக்கொண்டு அழுகிறான். பார்சிலோனா ரசிகனோ கண்ணில் கொடியைப் பொத்திக்கொண்டு அழுகிறான். 11 மாதங்களுக்கு முன்னால் அந்த மைதானம் இப்படித்தான் அழுதுகொண்டிருந்தது. 25 ஆண்டுகள் அந்த அணிக்கு விளையாடிய ஃப்ரான்செஸ்கோ டோட்டி ஓய்வு பெற்றபோது மொத்த ரோம் நகரமும் கண்ணீர் சிந்தியது. இந்த மைதானத்தில் கண்ணீர் மட்டுமே மிஞ்சியிருந்தது. ஆனால், இம்முறை கண்ணீரின் காரணம் வேறு. நேற்று இரவு… ரோமா – கால்பந்து உலகை கற்பனையில் மிதக்கவிட்டது, அதன் வரலாற்றில் மிகப்பெரிய சரித்திரம் படைத்துவிட்டது, பார்சிலோனாவைத் தோற்கடித்துவிட்டது. அதுவும் சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில்!
ரோமா – இத்தாலி சீரி-ஏ தொடரில் விளையாடும் அணி. பிரீமியர் லீக், லா லிகா மட்டுமே தெரிந்திருக்கும் நம்மவர்கள் இப்படியோர் அணியின் பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். 90 வருடங்களில் 3 சீரி-ஏ கோப்பைகள்தாம் வென்றிருக்கிறது. ஆனால், இத்தாலிய கால்பந்தின் தவிர்க்கமுடியாத அணி. கால்பந்து ஜாம்பவான்களை ஒப்பந்தம் செய்து, அவர்களின் அடையாளத்தில் பிரபலமடைந்த அணிகளுக்கு மத்தியில், தனக்கென்ற தனி அடையாளத்தைத் தேடிக்கொண்ட அணி. நூறு மில்லியன் டாலருக்கு விலைபோகும் வீரர்கள் இல்லை. நூறு மில்லியன் டாலருக்கு எந்த வீரரையும் வாங்கியதுமில்லை. மிகப்பெரிய அணிகளிலிருந்து கழட்டிவிடப்பட்ட வீரர்கள் சிலர், சில அணிகளிலிருந்து லோனில் வாங்கப்பட்ட வீரர்கள் சிலர் எனப் பெரிய நட்சத்திரங்கள் இல்லாத அணியை வைத்து பில்லியன் டாலர் மதிப்புள்ள பார்சிலோனாவைப் பந்தாடியுள்ளது. ரோமா…இத்தாலியக் கால்பந்தில் மட்டுமல்ல, சர்வதேசக் கால்பந்திலும் தவிர்க்க முடியாத அணி.
பார்சிலோனா அணி ரோம் நகரில் இறங்கியபோது 4-1 என்ற முன்னிலையோடு இருந்தது. கேம்ப் நூ மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் காலிறுதியின் முதல் சுற்றில் அப்படியோர் அபார வெற்றியைப் பெற்றிருந்தது பார்சிலோனா. ஐரோப்பியக் கால்பந்து வரலாற்றில் 2 அணிகள் மட்டுமே 3 கோல்கள் பின்தங்கிய நிலையில் இருந்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அப்படியொரு கம்பேக்கை ரோமா கொடுக்குமா..? அதுவும் பார்சிலோனாவுக்கு எதிராக..? சான்ஸே இல்லை. சாம்பியன்ஸ் லீக் தொடரில் தாங்கள் விளையாடிய கடைசி 10 போட்டிகளில் மூன்றே கோல்கள் மட்டுமே விட்டிருந்தது பார்சிலோனா. இந்த லா லிகா சீசனிலும் 31 போட்டிகளில் அவர்கள் வாங்கியுள்ளது 16 கோல்கள்தாம். அப்படிப்பட்ட அரணை உடைத்து 90 நிமிடங்களில் 3 கோல்கள் அடிக்க முடியுமா?