வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் விடுதியிலேயே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய அணியொன்று உருவாக்கும் முயற்சிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தன.
எனினும் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி நிலைமைகளால் அது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் இன்று வெளியிடப்பட்டன.
காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுப நேரத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதற்கமைய தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பீ.ஆர்.எல்.எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.