பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘சாஹோ’ படம் 300 கோடி வசூலைக் கடந்துள்ளது. இருப்பினும் படம் பற்றி கடுமையான விமர்சனங்கள் தான் வெளிவந்தன.
படத்தை இயக்கிய சுஜித் இதற்கு முன் 2014ல் ‘ரன் ராஜா ரன்’ என்ற ஒரே படத்தை மட்டும் தான் இயக்கியுள்ளார். இரண்டாவது படத்திலேயே பிரபாஸ் நாயகனாக நடிக்க 300 கோடி ரூபாய் செலவில் ‘சாஹோ’ படத்தை அவர் இயக்குகிறார் என்ற செய்தி வெளிவந்த போது பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
படத்தின் விமர்சனம் எப்படி இருந்தாலும் ரஜினிகாந்தை பிரபாஸும், 2.0 படத்தை இந்தப் படமும் வசூலில் முந்துவது பற்றி பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ‘சாஹோ’ படத்திற்கு வந்த விமர்சனங்கள் குறித்து அதன் இயக்குனர் சுஜித் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்,
“என்னுடைய முதல் குறும்படத்தை 17 வயதில் உருவாக்கினேன். பணமில்லை, குழு இல்லை இருந்தாலும் குடும்பத்திடமிருந்தும், ஆர்குட்டிலிருந்தும் பெரிய ஆதரவு கிடைத்தது.
என்னுடைய குறும்படங்களை 90 சதவீதம் நானே இயக்கி, ஷுட் செய்து, எடிட் செய்திருக்கிறேன். என்னுடைய தவறுகளில் இருந்துதான் நான் கற்றிருக்கிறேன். விமர்சனங்கள் என்னுடைய பயணத்தில் உத்வேகமாகத்தான் அமைந்திருக்கின்றன,” என்று தெரிவித்துள்ளார்.
நீண்ட தூரம் கடந்து வந்திருக்கிறேன். பல தடைகள் வந்திருக்கின்றன, ஆனால் துவண்டதில்லை. இன்று பலர் ‘சாஹோ’ படத்தைப் பார்த்திருக்கிறார்கள். பலர் இன்னும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இருந்தாலும் பலர் படத்தை விரும்பியிருக்கிறார்கள்.
படத்தைப் பார்த்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் எதையாவது மிஸ் செய்திருந்தால் மீண்டும் படத்தைப் பாருங்கள். முன்பை விட இப்போது மேலும் ரசிப்பீர்கள்.