சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தின் சார்பில் போர்த்துகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய முதலாவது உத்தியோகபூர்வ போட்டியில் அக்கழகம் 1:0 விகிதத்தில் வென்றது.
உலகக்கிண்ணப் போட்டிகளின் பின்னர் சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் ரொனல்டோ இணைந்தார். இதற்காக வருடமொன்றுக்கு 200 மில்லியன் யூரோ அவருக்கு சம்பளமாக வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
கழக மட்டத்திலான 2 போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்கம் தடை விதித்திருந்தது.
இதனால், அல் நாசரின் சார்பில் ரொனால்டோ போட்டிகளில் பங்குபற்றுவது தாமதமாகியது.
கடந்த வியாழக்கிழமை பிரான்ஸின் பரிஸ் செயின்ற் ஜேர்மைன் கழகத்துக்கும் (பிஎஸ்ஜி) அல் நாசர் கழகத்துக்கும் இடையிலான கண்காட்சி போட்டியில் ரொனால்டோ பங்குபற்றினார். அப்போட்டியில் ரொனால்டோ 2 கோல்களைப் புகுத்திய போதிலும் பிஎஸ்ஜி கழகம் 5:4 கோல்களால் வென்றது.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அல் நாசர் சார்பில் முதலாவது உத்தியோகபூர்வ போட்டியில் ரொனால்டோ பங்குபற்றினார்.
சவூதி ப்ரோ லீக் தொடரில் எத்திபாக் கழகத்துடனான போட்டியில் ரொனால்டோ அணித்தலைவராக பங்குபற்றினார். இப்போட்டியில் ரொனால்டோ கோல் புகுத்தவில்லை . எனினும் அல் நாசர் கழகம் 1:0 கோல்களால் வென்றது. அல் நாசர் கழகத்தின் சார்பில் பிரேஸில் வீரர் அண்டர்சன் டெலிஸ்கா 31 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தினார்.