நியூயார்க், கூகுள் நிறுவனம், தன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, சுந்தர் பிச்சைக்கு வழங்கிய, ரூ.2,508 கோடி மதிப்பிலான பங்குகள், நாளை, அவர் வசமாகின்றன. அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், இணைய தேடுபொறி தொழில்நுட்ப நிறுவனம், கூகுள். இதன் தலைமைச் செயல் அதிகாரியாக, தமிழரான, சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். இவர், தலைமைச் செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன், 2014ல், அவருக்கு, ஏராளமான பங்குகளை கூகுள் நிறுவனம் வழங்கியது. கூகுள் நிறுவன விதிமுறைப்படி, அதன் அதிகாரிக்கு வழங்கப்படும் பங்குகளை, மூன்று ஆண்டுகளுக்கு விற்க முடியாது. இந்நிலையில், நாளையுடன், இந்த பங்குகள் வழங்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் முடிவடைவதால், அந்த பங்குகள் மீதான முழு உரிமையும், சுந்தர் பிச்சை வசமாகிறது. இனி, அவர், அந்தப் பங்குகளை விற்க முடியும். கடந்த, 2014ல் வழங்கப்பட்ட அந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு, 2,508 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல், 2015 மற்றும் 2016ம் ஆண்டிலும், சுந்தர் பிச்சைக்கு, பல பங்குகளை, கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.