காஸா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஸா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மீண்டும் தாக்குதல்களை முன்னெடுத்தமையானது, பலஸ்தீனம் மீதான மற்றுமொரு ஆக்கிரமிப்பு செயலாகவே கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் உள்ளூர் வட்டாரங்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், நேற்று (புதன்கிழமை) இரவு தென் காஸா பகுதியில் உள்ள Juhor ad-Dik கிராமத்தின் கிழக்குப் பகுதியில், இஸ்ரேலிய போர் விமானங்கள் இரு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளன.
ஆயினும் இந்த தாக்குதல்களின்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்படவில்லை.
இதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் அடிக்கடி தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என வலியுறுத்தப்பட்டு வருகின்றபோதும், தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜீலை மாத ஆரம்பத்தில் இருந்து காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது. அன்றிலிருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வரையான 50 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையின்போது, 557 சிறுவர்கள் உட்பட கிட்டத்தட்ட 2,200 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.