சிறுகதை எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு 2021-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
“நட்சத்திரவாசிகள்’ எனும் அவரது நாவலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் அவருக்கு இந்த விருதுடன் ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையும், பட்டயமும் வழங்கப்பட உள்ளது.
இலக்கிய உலகில் சிறந்த படைப்புகளுக்கான உயரிய விருதாக சாகித்திய அகாதெமி விருது கருதப்படுகிறது. இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பை செவ்வாய்க்கிழமை சாகித்திய அகாதெமி வெளியிட்டது.
தமிழில் இந்த விருது எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய “நட்சத்திரவாசிகள்’ எனும் நாவலுக்கு வழங்க சாகித்திய அகாதெமியின் தலைவர் டாக்டர் சந்திரசேகர் ஒப்புதல் அளித்தார். இதற்கான தேர்வுக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த நாவல், இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழுக்கான தேர்வுக் குழுவில் உறுப்பினர்கள் என்.ஆவுடையப்பன், சு.வேணுகோபால், மு.தமிழ்மணி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இத்தகவலை சாகித்திய அகாதெமியின் செயலர் கே.ஸ்ரீநிவாச ராவ் தெரிவித்துள்ளார். இந்த விருதுகள் 24 மொழிகளில் வழங்கப்படுகின்றன.
தமிழ் மொழிப் பிரிவில் இவ்விருதைப் பெறும் இளம் எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். சென்னையில் மென்பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது நாவலின் பின்னணி தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்ததாகும். இது இவரின் முதல் நாவல். இவர் இதற்கு முன் “டொரினோ’, “ஒளிரும் பச்சை கண்கள்’ போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
2021-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது தமிழ் மொழிப் பிரிவில் பிரபல எழுத்தாளர் அம்பையின் (சி.எஸ்.லட்சுமி) “சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ எனும் சிறுகதைத் தொகுப்புக்கும், மு.முருகேஷ் என்பவர் எழுதிய “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுகதைத் தொகுப்புக்கும் பால் சாகித்திய விருது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
முதல்வர் வாழ்த்து: “தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரின் உளச்சிக்கல்களையும் உறவுச் சிக்கல்களையும் பின்னிப் படைத்த “நட்சத்திரவாசிகள்’ புதினத்துக்காக சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் இளம் எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு எனது நெஞ்சம்நிறை வாழ்த்துகள்’ என முதல்வர் சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]