ஈழத்து தமிழ்ப்பெண் பொலிஸ்துறையில் இணைந்து தனது கனவை நனவாக்கியுள்ளதாக பெருமிதமடைந்துள்ளாா்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடா சென்று, கனடா பொலிஸ் சேவையில் சிறப்பாக பணியாற்றிவரும் கிஷோனா நீதிராஜா, கனேடிய ஊடகமொன்றுடன் இவ்வாறு தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “எனது ஒன்பதாவது வயதில் இலங்கையிலிருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்தேன். சிறு வயது முதல் பொலிஸ் துறையில் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு, குடும்ப கட்டுப்பாடுகளும், தமிழ் மரபுகளும் தடையாக அமைந்தன.
அதனால், கனவுகளை புறந்தள்ளி தாதியர் பட்டப்படிப்பில் கவனத்தை செலுத்தினேன். நான்கு வருட தாதியர் பட்டப்படிப்பை நிறைவுசெய்த போதிலும், பொலிஸ் துறை மீதான ஆர்வம் குறையவில்லை.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தன்னார்வ தொண்டராக, ரொறன்ரோ பொலிஸ் சேவையில் இணைய வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் எனது புதிய வாழ்வை ஆரம்பித்துள்ளேன்.
பொலிஸ்துறை தொடா்பாக ஈழத்தில் அனுபவித்த சில கசப்பான அனுபவங்களால், ஈழத் தமிழ் ம்ககள் இத்துறைமீது அச்சம் கொண்டுள்ளனர். இந்த எண்ணத்தை தகர்த்தெறிய எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக இப்பணியை கருதுகிறேன். ஒவ்வொருவரது கனவுகளும், அதனை சாதிப்பதற்கான முயற்சிகளும் அனைவரையும் வாழ்வில் முன்னேற்றமான இடத்திற்கு செல்ல வழிவகுக்கும்” என்றார்.