கடத்தப்பட்ட மாணவிகளின் காணொளி : நிபந்தனை விதித்துள்ள பொக்கோ ஹராம்
நைஜீரியாவில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தம்மால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவிகள் தொடர்பான காணொளியை பொக்கோ ஹராம் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
சுமார் 50 மாணவிகள் மாத்திரமே காட்டப்படும் இந்த காணொணியில், முகம் மட்டும் தெரியும் வகையில் பர்தா அணிந்து உட்கார்ந்த நிலையில் இருக்கும் மாணவிகளின் முன்னால் தோன்றும் முகமூடி அணிந்த தீவிரவாதி, அவர்களை விடுவிக்க நிபந்தனை விதித்துள்ளான்.
அதில் ‘சிறையில் இருக்கும் எங்களது அமைப்பின் தீவிரவாதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள் உங்களது சிறுமிகள் எங்களிடம்தான் இருக்கின்றனர். அதை மறந்து விடாதீர்கள். எங்களது ஆட்களை விடுவித்தால் இவர்களை விட்டு விடுகிறோம்’ எனத் தெரிவிக்கின்றான்.
சுமார் 11 நிமிடங்கள் கொண்ட இந்தக் காணொளியில் பேசியுள்ள மாணவியொருவர், கடத்தப்பட்ட மாணவிகளில் 40 பேர் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்டதாகவும், அரச படையினர் நடத்திய விமானத் தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்தி நைஜீரியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நைஜீரியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிபொக் என்ற இடத்தில் 276 பாடசாலை மாணவிகள் பொக்கோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.