சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2022ஆம் ஆண்டுக்கான இருபது 20 கிரிக்கெட் அணியில் இலங்கை சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் ஜொஸ் பட்லர் தலைமையிலான அணியில் 11 அதி சிறந்த வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டில் துடுப்பாட்டம், பந்துவீச்சு அல்லது சகலதுறைகளில் அபரிமிதமாக பிரகாசித்த வீரர்களே தெரிவாகியுள்ளனர்.
துடுப்பாட்ட வரிசைப் பிரகாரம் 9ஆம் இலக்கத்தில் இடம்பெறும் வனிந்து ஹசரங்க கடந்த வருடம் நடைபெற்ற இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் பந்துவீச்சில் மிகத் திறமையாக செயற்பட்டிருந்தார்.
ஆசிய கிண்ணத்தில் 6 போட்டிகளில் 9 விக்கெட்களை வீழ்த்திய ஹசரங்க, உலகக் கிண்ணத்தில் 8 போட்டிகளில் 15 விக்கெட்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றார்.
மேலும் கடந்த வருடம் 19 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 34 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.
ஐசிசியின் 2022ஆம் ஆண்டுக்கான அணியில் இந்தியாவின் விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோரும் பாகிஸ்தானின் மொஹமத் ரிஸ்வான், ஹரிஸ் ரவூப் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
ஐசிசி வருடத்தின் இருபது 20 அணி (2022)
ஜொஸ் பட்லர் (தலைவர் – இங்கிலாந்து), மொஹமத் ரிஸ்வான் (பாகிஸ்தான்), விராத் கோஹ்லி (இந்தியா), சூரியகுமார் யாதவ் (இந்தியா), க்ளென் பிலிப்ஸ் (நியூஸிலாந்து), சிக்கந்தர் ராஸா (ஸிம்பாப்வே), ஹார்திக் பாண்டியா (இந்தியா), சாம் கரன் (இங்கிலாந்து), வனிந்து ஹசரங்க (இலங்கை), ஹரிஸ் ரவூப் (பாகிஸ்தான்), ஜொஷ் லிட்ல் (அயர்லாந்து)