எடின்பரோ நகரில் நடைபெறுகின்ற மரதன் ஓட்ட நிகழ்வை கௌரவப்படுத்தும் வகையில் தாயகத்தில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயம் வரையில் இன்று காலை அடையாள மரதன் ஓட்டநிகழ்வு இடம் பெற்றது.
தாயகத்தில் போதை ஒழிப்பு மற்றும் பசுமைபேணல் ஆகிய நோக்கங்களை அடைவதற்காக எடின்பரோ நகரில் நடைபெறும் மரதன் ஓட்டநிகழ்வில் பங்கேற்று நிதியினை சேகரித்து தாயகத்தின் மனித வள மற்றும் மாண்புமிகு சூழலை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்ற போதும் தாய் மண்ணின் நினைவு அழியாப் பற்றுடன் கல்வி கலாச்சாரம் சூழல் பாதுகாப்பு நோய் தடுப்பு விவசாய அபிவிருத்தி மற்றும்அனர்த்த கால உதவிகள் என பெருந்தொண்டு ஆற்றி வருகின்ற லண்டனை தளமாக கொண்டு இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மாணவர்கள், இளைஞர்கள் பற்கேற்றுள்ளனர்.
இதேவேளை இதில், ஓய்வு பெற்ற மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்த உறவுகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.