நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஊழல், மோசடிகள் தொடர்பான பொதுமக்கள் முறைப்பாட்டு அலுவலகம் மூடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை முறைப்பாடாக பதிவு செய்ய புதிய அலுவலகம் ஒன்றை உருவாக்கியிருந்தது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள அலரி மாளிகைக்கு அருகில் அமைந்திருந்த இந்த அலுவலகத்திற்கான வசதிகள் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்டன.
ஆரம்ப காலங்களில் இதன் அங்கத்தவர்களாக ஆளுங்கட்சியினர் மற்றும் ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்கள் செயற்பட்டிருந்தனர்.
எனினும் பின்வந்த காலங்களில் ஜே.வி.பி.யினர் விலகிக் கொண்டதன் காரணமாக ஆளுங்கட்சியினர் மாத்திரமே இதன் விசாரணை நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்தனர்.
இதன் காரணமாக அநாவசியமான பிரச்சினைகள் உருவாகலாம் என்று பிரதமரின் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, தற்போது குறித்த அலுவலகத்தை மூடிவிட பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, நிதிமோசடிப் பிரிவு என்பன சரிவர இயங்கிக் கொண்டிருப்பதன் காரணமாக அதற்குப் புறம்பாக இன்னொரு அலுவலகம் தேவையில்லை என்று பிரதமர் கருதியதன் காரணமாகவே குறித்த அலுவலகம் மூடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.