தென் ஆபிரிக்காவில் இந்த வருடம் மத்திய பகுதியில் நடைபெறவுள்ள 16ஆவது வலைபந்தாட்ட உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் சி குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.
16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் ஜூலை 28ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக ஆசிய சம்பியன் பட்டத்தை வென்று உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற இலங்கை தகுதிபெற்றுக்கொண்டது.
இங்கிலாந்தின் லிவர்பூரில் 2019இல் நடைபெற்ற உலகக் கிண்ண வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏ குழுவில் அவுஸ்திரேலியா, ஸிம்பாப்வே, வட அயர்லாந்து ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்த இலங்கை, கடைநிலை அணிகளுக்கான 2ஆம் சுற்றில் சமோஆ, பிஜி ஆகிய அணி களிடம் தோல்வி அடைந்தது. எனினும் சிங்கப்பூரை 2ஆம் சுற்றில் வீழ்த்திய இலங்கை, 15ஆம், 16ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டியிலும் சிங்கப்பூரை வெற்றிகொண்டது.
6 போட்டிகளில் விளையாடிய தர்ஜினி சிவலிங்கம் 348 கோல்களைப் போட்டு அதிக கோல்கள் போட்டவர்கள் பட்டியலில் முதலாம் இடத்தைப் பிடித்தார்.
தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் தர்ஜினி சிவலிங்கம், 2023 உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இலங்கை வலைபந்தாட்ட அணியின் தலைமைப் பயிற்றுநராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் திலகா ஜினதாச, உதவிப் பயிற்றுநர் பி. டி. பிரசாதி மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தர்ஜினி குறித்து தீர்மானிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் ஜெமெய்க்காவை ஜூலை 28ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.
அதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்காவை 29ஆம் திகதியும் வேல்ஸை 30ஆம் திகதியும் இலங்கை எதிர்த்தாடும்.
முதல் சுற்றில் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஜுலை 31ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 3ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன் ப்ளே-ஆவ்ஸ், நிரல்படுத்தல் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன ஆகஸ்ட் 4ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதிவரை நடைபெறும்.