விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர்.
டெல்லியில் நடைபெறும் குறித்த போராட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த போராட்டத்தில் 300ற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் இந்த போராட்டத்தின்போது மத்திய மின்சார துறை, சுற்றுச்சூழல் துறை, வேளாண் துறை, சட்டத்துறை அமைச்சர், நிதி ஆயோக் ஆகியோர்களை சந்தித்து கோரிக்கைள் உள்ளடங்கிய மனுவொன்றினையும் கையளிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த மனுவில், ஐடிபிஎல் திட்டத்திற்கு விளைநிலங்களுக்கு பதிலாக சாலையோரத்தினை பயன்படுத்த வேண்டும்.
அத்துடன் செயற்பாட்டில் உள்ள உயர் மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்திற்கும், கெயில், பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்திற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உயர் மின் கோபுரங்களால் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.