கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் திங்கட்கிழமை (23) முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் மாணவர்களின் நலன் கருதி தடையற்ற மின் விநியோகத்தை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு மின் அமைச்சு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் றோகிணி மாரசிங்க , மின்சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பி இதனை வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகளுக்கு 331,709 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர். இந்த பரீட்சைகள் ஜனவரி 23 ஆரம்பமாகி பெப்ரவரி 17 வரை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் நாளாந்தம் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால் அது மாணவர்கள் பரீட்சைக்கு தயாராவதற்கு தடையை ஏற்படுத்தும்.
அதற்கமைய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களின் அடிப்படை மனித உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
எனவே உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பை தவிர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.’ என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.