இரண்டாவது வாரமாகத் தொடரும் குடியேற்றவாசிகளின் உண்ணாவிரதப் போராட்டம்
ஒன்ராரியோ குடிவரவுத் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 50 குடியேற்றவாசிகள் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர்ந்து இரண்டாவது வாரமாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிவரவுத் தடுப்புக்காவலுக்கான ஆகக்கூடிய காலப்பகுதி 90 நாட்கள் ஆகக் குறைக்கப்பட வேண்டும், குடிவரவின் நிமித்தம் தடுப்புக்காவலில் வைக்கப்படுவோர் அதியுயர் பாதுகாப்புச் சிறைகளில் அடைக்கப்படக் கூடாது மற்றும் குடிவரவுத் தடுப்புக்காவலில் உள்ளோர், 90 நாட்களுக்குள் தமது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படாதவிடத்து அவர்கள் தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்படவேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.
லின்ட்சே, ஒன்ராரியோ மற்றும் டொறன்ரோ கிழக்கில் உள்ள தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் கனடாவின் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ரால்ப் கூடலேயைச் சந்திக்கும் வரை தமது போராட்டத்தைத் தெர்வதாகத் தெரிவித்துள்ளனர்.
குடிவரவுத் தடுப்புக்காவலில் உள்ளோர், அதற்கான தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைக்கப்படுகின்றனர். எனினும் அவர்கள் ஆபத்தானவர்கள் எனக் கருதப்படும் பட்சத்தில் மாகாணச் சிறைகளுக்கு மாற்றப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.













